
இந்த நிலத்தின் ஐதீகங்கள், குலமரபு வழக்கங்கள் யாவும் எப்போதும் பெண்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் ஒருபோதும் மதிப்பளிப்பதில்லை. தெய்வங்களின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் நூதன பழக்க வழக்கங்களை எதிர்த்து, மறுத்து மீறும் துணிச்சலை பெண்கள் தங்கள் வாழ்வின் பொழுதுகளில் இருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். இங்கே மீறமுடியாத. ஊர் நடைமுறைகள் பெண்களின் உடலை மையமிட்டே வடிவமைக்கப்படுகின்றன. அவர்களுடைய உடலும், மனமும் அடையும் வளர்ச்சியின் உபவிளைவே பெண் பருவ வயதை அடைவது. பூப்பெய்தல் என அதைப் புனிதப்படுத்தி, வீட்டுக்கு விலக்கம் என அதனை நிலைப்படுத்தி அதன்பிறகு தீட்டு, புனிதம் எனும் ஆச்சாரங்களை நியாயம் போல பாவிக்க பழக்குகின்றனர். எத்தனையோ மாற்றங்கள் உலகியல் வாழ்கையயில் உருவான போதும் ஜாக்கெட் அணியாத பெண்கள் நிறைந்திருக்கும் கிராமம் இன்றும் இருக்கிறது. பெண்களை அந்த மூன்று நாட்களுக்கு ஊரின் பொட்டல் காட்டில் தனித்து வைக்கப்பட்டு நியாயம் போல பெண்களையே அதனை ஏற்க வைத்திட கடவுளை துணைக்கழைப்பதும் இங்கே நடந்திருக்கிறது.
பொட்டல் பிரசவம்
அந்தோணியா கிராம்ஸி எனும் மார்க்ஸிய அறிஞர் அதிகாரம் குறித்து சொல்லியது நினைவிற்கு வருகிறது. “அதிகாரம் தன்னை நிலைநிறுத்த இப்போதெல்லாம் ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை. எவரின்மீது அதிகாரத்தை செலுத்த விரும்புகிறதோ அவர்களே அதனை விரும்பி ஏற்றிக்கொள்ளும் மனோபாவத்தைக் கட்டமைக்கும்.”. அதனால்தான் சமையலை ஆண் செய்வதை பெண்கள் மறுக்கிறார்கள். இது பெண்வேலை என யார் முடிவு செய்தது? குழந்தை வளர்ப்பு, வீட்டைப் பராமரிப்பது, சமையல் பணி என யாவற்றையும் அவர்களின் வேலைதான் என அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை கட்டமைக்கிறார்கள். அதற்கு காலம் காலமாக தொடரும் நடைமுறை, ஊர்வழக்கம் அதை மாற்ற முடியாது என தொடர்ந்து சொல்லப்படுவதும் நடக்கவே செய்கிறது. இது எங்கள் ஊரின் மாற்றவே முடியாத நடைமுறை. இதை மாற்றினால் ஊரே பாழ்படும். தெய்வ குத்தமானால் மனிதர்களால் எப்படி தாங்கமுடியும் எனும் பதட்டத்தை உருவாக்கிடும் ஒருநடைமுறையைப் பற்றிய கதை ‘பொட்டல் பிரசவம்’ .

எழுத்தாளர் ஜெயராணி
‘பொட்டல் பிரசவம்’ கதை எழுத்தாளர் ஜெயராணியின் ‘கறுப்பு வானம்’ தொகுப்பின் முதல்கதை. ஜெயராணி நீண்ட காலமாக கட்டுரையாளராகவே இலக்கிய உலகில் அறியப்பட்டிருந்தார். அவருடைய ‘ஜாதியற்றவளின் குரல்’ எனும் கட்டுரைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர், கட்டுரையாளர் செயற்பாட்டாளர் என அறியப்பட்டிருந்த ஜெயராணியின் இரண்டாவது தொகுப்பு ‘கறுப்பு வானம்'(2026. ). ‘செந்நிலம்’ எனும் சிறுகதைத்தொகுப்பே அவருடைய முதல் தொகுப்பு. ‘செந்நிலம்’ 2024-ம் ஆண்டிற்கான பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதினைப் பெற்ற நூல். அவருடைய ‘கறுப்பு வானம்’ தொகுப்பிற்கும் இதே போலான விருதுகள் கிடைக்கப்போவது நிச்சயம். அவருடைய எழுத்துலகின் மையம் ஒடுக்கப்போரின் பாடுகளை கதைகளாக்குவதுதான். சாதியற்ற சமூகத்தை வடிவமைத்திட இப்போதுவரையிலும் தடையாக. நீடித்திருக்கும் பண்பாட்டுக்கூறுகளின் மீது தன்னுடைய கதைச்சொற்களால் உக்கிரமான எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ஜெயராணி. ஓடுக்கப்பட்டோரிலும் ஒடுக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் பெண் பாடுகளைப் பற்றிய தனித்த கதைதான் ‘பொட்டல் பிரசவம்.’
கதையின் தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. அறுபது வருடங்ளுக்கும் மேலாக அந்த ஊரில் நீடித்து நிலைத்திரும் நடைமுறை பொட்டல் பிரசவம். பெண் கருவுற்றிருக்கும் நாளில் இருந்து அந்த தாய் மட்டுமல்ல. அவள் சுமந்து கொண்டிருக்கும் குழந்தையும் தெய்வத்தின் சொத்து. இரண்டு உயிர்களுக்கும் நல்லதும், கெட்டதும் இனி அந்த தெய்வத்தின் கையில்தான் என்று ஊரே நம்புகிறது. கருவுற்ற நாட்களில் அந்த பாவையம்மனை நினைத்து விபூதி பூசிக்கொண்டால்போதும் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என பெண்களை நம்ப வைக்கிறார்கள். அதற்கு பெண்கள் வழிவழியாக தங்களுடைய பிரசவகதைகளை கருவுற்றவர்களிடம் சொல்கிறார்கள். “பாவையம்மா பாத்துக்குவா…ஆத்தாளும் புள்ளையும் பத்திரமா வருவீக. தைரியமாப் போயிட்டு வா தாயீ “என்று ஆசீர்வதித்து விடைகொடுக்கிறார்கள்.

ஓலைக்குடிசை
பெண்களுக்கு எதிராக பெண் தெய்வங்களை நிறுத்தும் இந்த தந்திரம் இன்றுவரையிலும் நின்றபாடில்லை. அவள் நிறைமாத கர்ப்பிணியாக ஆனவுடன் அவளை கோயில் பூசாரியிடம் அழைத்துப் போய் குறி சொல்லி எல்லாவற்றையும் பாவையம்மன் பார்த்துக்கொள்வாள் என பொட்டல் காட்டில் அவளுடைய புருஷன் கட்டி வைத்திருக்கும் ஒலைக்குடிசையில் தங்க வைத்துவிடுவார்கள். அதன்பிறகு தனியாக தனக்கு அவளே பிரசவம் பார்த்துக்கொள்வாள். பாவையம்மாள்தான் டாக்டர். அவளுடைய விபூதி மட்டுமே மருந்து மாத்திரை. இதை அந்த ஊருக்குள்ளேயே கல்யாணம் கட்டிக்கொண்டு குழந்தை பெறுகிற பெண்கள் மட்டுமல்ல,வேறு ஊரில் இருந்து இங்கு திருமணமாகி வந்த பெண்களுக்கும் இதே நடைமுறைதான். முள்காடாகிக் கிடக்கும் அந்த பொட்டல் காட்டில் புருஷன் கட்டி வைத்திருக்கும் ஒலைக்குடிசையில்தான் அவள் தன்னுடையை குழந்தையைப் பிரசவிக்க வேண்டும். தலைப்பிள்ளைக்கு பிரசவம் தாய்வீட்டில்தான் எனும் சமூகநடைமுறையையும் அந்த ஊர் ஏற்பதில்லை.
குழந்தையைப் பிரசவித்து பதினாறு நாட்கள் முடியும் வரையிலும் ஊர்க்காரர்கள் எவர் முகத்திலும் முழிக்கக்கூடாது. அவளுக்கான சாப்பாடு ஊர்க்காரர்களால் கொண்டு வந்து குடிசை வாசலில் வைக்கப்படும். அவள் விதியைப் பின்பற்றுகிறாளா என்பதைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக அந்தப் பெண்ணுக்கு காவலாக இரண்டு வயது முதிர்ந்த பெண்களை காவலுக்கும் வைப்பார்கள்.. இருள் கவிழ்ந்து கொண்டிருக்கும் நடுக்காட்டில் கடவுளின் பெயரால் பெண் உடல்களின் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குரூர நடைமுறையை ஒரு பெண்ணைக்கொண்டே கலைத்து எழுதுகிறார். எழுத்தாளர்.
பூவரசி, சித்திரனை திருமணம் செய்ததால் அந்த ஊருக்கு மருமகளாக வாழ வந்தவள். படித்து டீச்சர் ஆக வேண்டும் எனும் கனவில் வளர்ந்த அவளுக்கு சித்திரனுடன் கல்யாணம் நடக்கிறது. அவள்மீது கொண்ட பெரும் காதலில் அவன் அவளை பக்கத்து நகரத்துக் கல்லூரியில் பி.எட் படிக்கவும் சேர்த்து விடுகிறான். அவள் கல்யாணம் கட்டி வந்த மூன்றாவது நாளில் ஒரு பொட்டல் பிரசவம் நடக்கிறது. முத்துநகை என்கிற பெண் பிரசவ வேதனையில் துடிக்கிறாள். பிரசவ வலியும், அப்போது எழும் வேதனையும் பெண்களுக்கு மட்டுமேயான அந்தரங்கமான உணர்வு என்பது அங்கே மறுக்கப்படுகிறது. ஒரு வேப்பங்கொம்பையும்,கருக்கரிவாளையும் அவளிடம் தருகிறார்கள். பக்கத்து வீட்டுப்பெண்கள் ஒலைப்பெட்டி, அரிக்கேன் விளக்கு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவளை பாவையம்மன் கோயில் பூசாரி முன் நிறுத்துகிறார்கள். அவரும் அவளுக்கு விபூதியெல்லாம் போட்டு எல்லாத்தையும் பாவையம்மா பாத்துக்குவா என தைரியப்படுத்துகிறார்.

புருஷன் பொட்டல் காட்டில் கட்டி வைத்திருக்கும் பிரசவக் குடிசையை நோக்கி அழைத்துப் போகிறார்கள் ஊர்ப்பெண்கள். ‘பிரசவ வலி எடுத்தா உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக வேண்டியதுதானே. இது எதுக்கு கோயிலுக்கு கூட்டிப் போறாங்க?’ என கேள்வி கேட்கும் பூவரசியை அச்சத்துடன் பார்க்கிறான் சித்திரன்.பூவரசியால் ஊர்நடைமுறை எனும் இந்தப் பைத்தியக்காரணத்தை ஏற்க முடியவில்லை. பிரசவக்காட்டிற்கு இவளும் போய் பார்க்கிறாள். அங்கே குடிசைக்கு வெளியே காத்திருக்கும் மூதாட்டிகள் பிரசவமாகிக் கொண்டிருக்கும் முத்துநகைக்கு ஆலோசனைக் குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.’ டாக்டர்ட்டதான் கூட்டிப் போகல, நீங்களாவது உதவி செய்யலாம்ல’ என அந்தக்கிழவிகளிடம் கெஞ்சுகிறாள். குடிசைக்குள்ளிருந்து கேட்கும் அந்த வலியின் குரலை இவளால் கேட்க முடியவில்லை. அவள் குடிசைக்குள் போக முயற்சிக்கிறாள். அவளை ஊர்ப் பெருசுகள் தடுத்து நிறுத்துகின்றன. இவள் பெரும் கவலையுடன் வீடு திரும்பி விட்டாள். முத்துநகையின் பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்த செய்தியால் அதிர்வுறுகிறாள் பூவரசி. பூவரசி அந்த பொட்டல் பிரசவக் குடிசையை வெறுக்கிறாள்.

கருக்கொள்ளும் பூவரசி
சமூக நடைமுறைகளை ஒரு மித்தைப் போல ரொமான்டிசைஸ் செய்ய விரும்புகிறவகள் இந்தக்கதையை முத்துநகையின் பிரசவக்காட்சிகள். அவளுடைய குழந்தையின் மரணம் என எழுதி மனம் கனக்க செய்திருப்பார்கள். ஆனால் ஜெயராணி அதன் பிறகான கதையை எழுதியிருக்கிறார். பூவரசி கருக்கொள்கிறாள். அவளுடைய கணவன் அவளை பாவையம்மா கோயிலுக்கு அழைக்கிறான். ‘நான் கோயிலுக்கு வருவேன். சாமி கும்புடுறேன். ஆனா பிரசவம் பார்க்க ஆஸ்பத்திரிக்குத்தான் போவேன். இதை யார் தடுத்தாலும் சரி நான் விடமாட்டேன்’ என்கிறாள். ஊரில் பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். ஊர் நடைமுறைய மீறுனா அவ்வளவுதான் இரண்டு பேருக்கும் இடையில இருக்குற உறவ தீர்த்து விட்டுற வேண்டியதுதான் என்றும் சொல்கிறார்கள்.
பூவரசி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறாள். பக்கத்து ஊர் ஆரம்ப சுகாதர நிலையம் போகிறாள். தொடர்ச்சியாக வைத்தியம் பார்க்கிறாள். அவளுடைய குடும்பம் மட்டுமல்ல,ஊரே பாவையம்மன பகைச்சா அம்புட்டுதான் உனக்கு மட்டுமில்ல, ஊருக்கே நல்லதில்ல என்கிறார்கள். அந்த நாளில் அவளை ஊரே திரண்டு அவளுடைய கணவன் கட்டி வைத்திருக்கும் பொட்டல் பிரசவக் குடிசையை நோக்கித் தள்ளுகிறார்கள். அவள் மறுத்துத் திமிர அருகாமை ஊர் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த வண்டியில் அவளை முத்து நகை ஏற்றுகிறாள். துயரப்பட்டவளுக்குத்தானே வலியும் வேதனையும் புரிதலுக்குள்ளாகும். மாற்ற முடியாத நடைமுறை என்று இந்த உலகத்தில் எதுவும் இருக்க்கிறதா என்ன? எதையும் யாராவது செய்யத்தானே வேண்டும். பூவரசி அந்த முதல் எதிர்க்குரலை உறுதியாக முன்வைத்திருக்கிறாள்.அதன்பிறகான அந்த ஊரின் பிரசவங்கள் நிச்சயமாக பொட்டல் காட்டில் நடந்திருக்காது.
– ம.மணிமாறன் (தொடரும்)
1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/
2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/
3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/
4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/




இது கொஞ்சம் அபத்தமான கதையாகத் தெரிகிறது. இன்றிருக்கக் கூடிய பழங்குடி இன மக்களிடத்தில் கூட பொட்டல் பிரசவம் போன்ற நடைமுறை இருக்க வாய்ப்பில்லை. கண்டதையும் கற்பனை செய்துகொண்டு ஒருவர் கதையெழுதுகிறார். அதையும் திரு மணிமாறன் போன்றவர்கள் சிலாகிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தோழர் வணக்கம்.
கற்பனையைவிட நிலத்தின் நிஜம் மிகவும் குருரமானது.
ஜெயராணியின் களப்பணியில் கிடைத்த உண்மைச் சம்பவத்தையே அவர் கதையாக்கியிருக்கிறார்.
அந்த ஊரில் மருத்துவமனை நோக்கிய பயணத்தை ஒரு பெண் துவக்கி வைத்திருக்கிறாள். அப்போதும்கூட ஊரில் பதட்டமாகி சரி பாவையம்மனின் கோபத்தை சாந்தப்படுத்த அவளுக்கு நூற்றியொரு ஒரு ருபாய் காணிக்கையாக வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். இப்போதும் அந்த நடைமுறை அங்கே பின்பற்றப்படுகிறது…