
தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உயரட்டும் கருப்புக்கொடி, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
மத்திய பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையரை சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி’. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜக. தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். திமுக தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



