
ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நேற்று (ஏப்.23) ராமநாதபுரம் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை டிஎஸ்பி ராமகிருஷ்ணன்(58) என்பவர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இடையகோட்டை, கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வாகனத்தில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த போது காளாஞ்சிபட்டி அருகே நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடடினயாக அவரை போலீஸார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



