
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (மே 20) செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், : ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து, மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் மருந்தகங்கள் கடை அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் என தமிழகம் முழுவதும் 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மருத்துவ ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கு தேவையான அவசர சிகிச்சை கிடைப்பதற்காக சுகாதாரத் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வது என்பது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வராது. ஆனால், அவற்றை நெறிமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுப்போம். நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது மாநில உரிமைக்கும் நலனுக்கும் எதிரானது. நீட் நுழைவுத்தே்ரவு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு. இதுதொடர்பாக நிச்சயம் மத்திய அரசை வலியுறுத்துவோம். போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவை உருவாக்கியுள்ளார். ஆன்லைன் மூலமாக போதைப்பொருள் கிடைப்பதை தடுக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.



