
தவெக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை இன்று ( மே 20) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் விரும்புகிறார் என்று தெரிவித்தார்.
அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அவரிடம் அமைச்சரவையில் பங்கேற்குமாறு ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு திருமாவளவன்,” கடந்த மே 8-ம் தேதி கூடிய விசிக உயர்நிலைக் கூட்டத்தில், பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்றார்கள். இறுதியாக தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தனர். மறுநாள் கட்சியின் பொதுச்செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சரவையில் இடம் பெறாமல் நிபந்தனையற்ற ஆதரவு தரை முடிவெடுத்தோம்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளச்சேரிக்கு வருகை தந்த விஜய், அவரது விருப்பத்தை தெரிவித்தார். தற்போது ஆதவ் அர்ஜுனா அதை தற்போது வழிமொழிந்துள்ளார். இது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு எங்களது முடிவை அறிவிப்போம் நாங்கள் தவெக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்துதான் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். தற்போது வெளிப்படையாக தவெக தரப்பில் இருந்து அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற விருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களின் அழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அழைப்பு குறித்து விரைவில் முடிவை அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.



