தவெக ஆட்சியை கவிழ்க்கும் திட்டமா?: தங்கம் தென்னரசு விளக்கம்

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் திமுகவுக்கு இல்லை என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மூன்று மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் பதில் அளித்துள்ளன. இது தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு இன்று (ஜூன் 9) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாதமும் டிவியை பார்த்தாலும், நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான தவெக நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்எல்ஏ மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கியுள்ளது தூய சக்தி என கபட வேடம் போடும் தவெக. இத்தகைய சூழலை மனதில் வைத்து, ‘இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்’ என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தாலும், ‘ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்கிற நிலையில் தவெக ஆட்சி உள்ளது’ என அவர் விமர்சித்தார். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என அவர் கூறியதாக திரித்து செய்திகள் பரப்பப்படுகின்றன.

ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் பேசவுமில்லை, அது அவரது நிலைப்பாடும் அல்ல. நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் என நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், ‘மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடு தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என்று பொருள்படும்படி தான் இதை கூறியிருந்தார்.

ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால், இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூக வலைதளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளை தான் மக்கள் சொல்லி வருகிறார்கள். இதை தான் மு.க. ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *