நேபாளத்தில் 120 தமிழர்கள் சிக்கியுள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

நேபாளத்தில் இன்னும் 120 தமிழர்கள் அங்கு சிக்கியுள்ளனர் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500- என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மேலும், 1500-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்று அங்கு ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் டெல்லியில் இன்று(ஆகஸ்ட் 28) செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேபாள நாட்டிலிருந்து மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்து பேசினோம். அனைவரும் உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இந்த பேரிடர் காரணமாக அனைவரும் தங்களின் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டுவிட்டனர். அத்துடன் அவர்களிடம் பயணத்திற்கான உரிய ஆவணங்களும் அவர்களிடம் தற்போது இல்லை.

எனவே, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதனை செய்து கொடுத்துள்ளோம், விரைவில் அவர்கள் அனைவரும் சென்னை வந்தடைவார்கள். தற்போது அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மனதளவில் இன்னும் மீண்டு வரவில்லை. 57 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்று உள்ளனர். இதில் 21 பேர் மட்டும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மற்றவர்களை தொடர்பு கொள்ளவும் அனைத்து வகையிலும் மத்திய அரசு உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் நேரடியாக சென்று மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைகள் முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளரிடம் ஆலோசித்தோம். தற்போது மற்றொரு புதிய தகவலாக இன்னும் 120 தமிழர்கள் அங்கு சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது அவர்களையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல் படி சுமார் 400 தமிழர்கள் பங்கு சென்றுள்ளனர். இதில் 140 பேர் பாதுகாப்பாக ஒரு பகுதியில் உள்ளனர் 21 பேர் தற்போது பத்திரமாக அங்கிருந்து மீட்டு அழைத்து வந்துள்ளோம். இந்த நிலையில் 90-க்கும் மேற்பட்ட தமிழர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்க முடியவில்லை என்றாலும், துறை ரீதியான அனைத்து தகவல்களும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறோம்.

வெள்ளப்பெருக்கால் மூன்று மாடி அளவிற்கு சேறு உள்ளதால் மீட்பு பணியில் அவர்களும் கவனத்துடன் செயல்பட வேண்டி உள்ளது. மீட்கப்பட்ட 21 பேரினுடைய விபரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் எந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னையில் குழு அமைத்து அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு ரயில் மூலமாகவோ அல்லது கார் மூலமாகவோ என அவர்களுக்குள் வாகனங்கள் மூலம் அவர்களை அனுப்புவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *