
பொலிவியாவின் வியாசா நகரில் உள்ள ராணுவ முகாமில் நடந்த சக்தி வாய்ந்த வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 62 பேர் காயமடைந்தனர்.
பொலிவியாவின் வியாசா நகரில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு பட்டாசு மற்றும் வாணவேடிக்கைக்கான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் இருந்து திடீரென சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிவிபத்தில் 10 முதல் 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் வியாசா சுகாதாரத் துறை இயக்குனர் ரீட்டா நெப்ராஸ்கா உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 14 பேர் லா பாஸ் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், வெடிவிபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாலும், சிதறியதாலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான பட்டாசு மற்றும் வாணவேடிக்கைப் பொருட்கள் சேமிப்புப் பகுதியிலிருந்தே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



