
மகளிர் உரிமைத்தொகையாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு விரைந்து நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மகளிருக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்ரவரி 13) காலை வெளியிட்டுள்ளார் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அவர், ரூ.5 ஆயிரம் மகளிர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சி செய்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் மிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்., இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி” என்று தெரிவித்துள்ளார்.



