
நடிகை த்ரிஷா
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு, நடிகை த்ரிஷா வழக்கறிஞர் மூலமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது அவர் பேசுகையில், , விஜய் அரசியல் அனுபவமில்லாதவர். முதலில் த்ரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு தவெக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் பேட்டிக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில், பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
- எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் அருவருப்பான கருத்து குறித்து இந்த அறிக்கையை வெளியிடப்படுகிறது.
- மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
- எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.
- எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடாமல், தனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார். மிக முக்கியமாக, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான நிலைப்பாடு. மேலும், உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும், சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எனது கட்சிக்காரரின் பெயரை அவருடன் தொடர்பற்ற விஷயங்களில் இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



