
ராஜஸ்தானில் லாரி மீது ஸ்லீப்பர் பஸ் மோதி தீப்பிடித்ததில் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தாரகண்ட் மாநிலம், ரிஷிகேஷிலிருந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூருக்கு ஸ்லீப்பர் பஸ் சென்று கொண்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி- மும்பை விரைவுச்சாலையில் இன்று அதிகாலை அந்த ஸ்லீப்பர் பேருந்து லாரி மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துக் கொண்டன. இதனால் பயணிகள் அலறித் துடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர். ஆனால், சிலர் தீக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எப்படி இந்த விபத்து நடந்தது என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



