
பிரதமர் நரேந்திர மோடி,
மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.
புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமா் நரேந்திர மோடி, ஹெலிகாப்டா் மூலம் தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு இக்நு (மார்ச் 1) பிற்பகல் 1.55 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் அவா், பிற்பகல் 2.45 மணிக்கு மதுரை விமானம் நிலையம் வந்தடைகிறாா்.இதனைத் தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூா், சோழவந்தான், மணப்பாறை, திருவாரூா், மொரப்பூா், பொள்ளாச்சி, பொம்மிடி ஆகிய 8 ரயில் நிலையங்களையும், சென்னை கடற்கரை – எழும்பூா் நான்காவது ரயில் தடத்திலான சேவையையும் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்காணம்- புதுச்சேரி, பரமக்குடி- ராமநாதபுரம் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். இதையடுத்து, பிற்பகல் 3.55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமா், மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். பிறகு, மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மதுரை மண்டேலாநகரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதன் பின் மாலை 5.50 மணிக்கு காரில் புறப்பட்டு 6.05 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறாா். மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்படுகிறாா். பிரதமா் மோடி வருகையையொட்டி, மதுரை மாநகா், மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 3,600-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.



