பாஜகவிற்காக விஜய்யிடம் பவன் கல்யாண் பேசினாரா?: தவெக விளக்கம்

விஜய், பவன் கல்யாண்.

பவன் கல்யாண் விஜய்யிடம் பேசினார் என்ற கதைகள் அரசியலுக்கு எடுபடாது என்று தவெக கூறியுள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘கல்லாப் பெட்டி’ கனவுகளும். கற்பனைப் போர் வீரர்களும்! தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி ‘உண்மைக்குப் புறம்பான’ செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னர் இதேபோல் பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. ‘அவர் பேசிவிட்டார், கைகோர்த்துவிட்டார்’ என்று ‘வாடகை வியாபாரி’ ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், ‘நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது’ என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது.

மீண்டும் அதே ‘பழைய ஸ்கிரிப்ட்டை’ அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில ‘கல்லாப் பெட்டி’ முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை.. தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும்.

போட்டிக்கு என்று சில ‘ விர்ச்சுவல் வாரியர்ஸால்’ ( Virtual Warriors) உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே ‘ஜோசியம்’ பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு” என்று கூறப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *