
இந்த கூட்டணியில், அந்த கூட்டணியில் சேரப்போறாரு அப்படின்ட்டு ஒரு பொய்யான ஒரு பிரச்சாரத்தை பண்ணிக்கிட்டு இருந்தாங்க என்று விஜய் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 18) மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக 1,000 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. அழைப்பிதழ் உள்ளபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நோன்பு திறந்ததைத் தொடர்ந்து இஸ்லாமிய சகோதரர்களுடன் தொப்பி அணிந்து பந்தியில் தரையில் அமர்ந்து சிறப்புத் தொழுகையில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், “நாம அரசியலுக்கு வந்ததுல இருந்தே நம்மை பத்தி நிறைய சில வதந்திகள், அந்த டீம், இந்த டீம் அப்படிலாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க இல்லையா? ஆனால், இவரு எந்த டீமும் கிடையாது, மக்களுடைய டீம் அப்படின்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுக்கு அப்புறம், வேற என்ன அவதூறு பரப்பலாம், இவரு மேல அப்படின்ட்டு டிரை பண்ணி எல்லாமே அவங்களுக்கு ஒர்க்கவுட் ஆகலை.
கடைசியில என்னதான் இந்த விஜய்யை பண்ணலாம் அப்படின்னு நினைக்கும்போது தான் இந்த கூட்டணி, அந்த கூட்டணியில் எல்லாம் சேரப்போறாரு அப்படின்ட்டு ஒரு பொய்யான ஒரு பிரச்சாரத்தை பண்ணிக்கிட்டு இருந்தாங்க, இந்த நியூஸ் எல்லாம் கேட்டு நீங்க கொஞ்சம் கன்பியூஸ் ஆயிருப்பீங்க.
அதனால் மறுபடியும் ஓபனாக , தெளிவாக ஒரு விஷயத்தை நான் சொல்றேன், நான், நாங்கள் எப்பவுமே மதச்சார்பற்ற கொள்கைன்றதுல அந்த ஸ்டாண்ட்லயோ , மதச்சார்பற்ற சமூக நீதியின்ற அந்த நிலைப்பாட்டுலயோ எப்பவுமே சமரசம் வெச்சுக்கவே மாட்டோம். நம்மளுடைய தலைமையில தான் ஆட்சி அப்படின்றதுல எப்பவுமே உறுதியா இருக்கோம். இன்னைக்கு என்னுடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகள். கான்பிடென்ட்டாக இருங்க, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். தனித்துதான் நிற்கிறேன்” என்று கூறினார்.



