
எடப்பாடி பழனிசாமி
அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி டெல்லி இன்று செல்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தமிழ்நாடு தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிகிறது. கூடுதல் தொகுதிகளை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபட திமுக திட்டமிட்டு வருகிறது.
அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு நிறைவடையாமல் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 19) காலை 10 மணியவில் சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.



