
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் ஒரு ஆதிதிராவிடர் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் வேட்பாளர் பட்டியலை நோக்கி திரும்பியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், ராமதாஸ்-சசிகலா என ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தவெக, இந்த தேர்தலில் எந்த அளவு வாக்குகளை வாங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அதிமுக முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 25) அறிவித்தார். அதில் ஒருவர் கூட ஆதிதிராவிடர் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. நேற்று வெளியிட்ட 23 அதிமுக வேட்பாளர்களில் கொங்கு வெள்ளாள கவுண்டர் 5 பேர்,
முக்குலத்தோர் 8 பேர், வன்னியர் 4 பேர், நாடார், முதலியார் செட்டியார் என இதர சமூகத்தினர் 6 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம், முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு அவிநாசி தொகுதி வழங்கப்படாதது இச்சர்சையை கூர்மைப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்,” எங்கள் பொதுச்செயலாளர் 23 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலைத்தான் வெளியிட்டுள்ளார். 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. எனவே, அடுத்த பட்டியலில் அனைத்து சமூகத்தினருக்கும் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.



