
வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக போட்டியிடும் உதயநிதி ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் உள்ளிட்டோர் சென்றார். ரோடு ஷோவாக சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் பாலக்கரை புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.



