தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி, அதிமுக- பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சசிகலா தலைமையிலான கூட்டணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையிலான கூட்டணி என பல்வேறு கட்சிகள் களம் காண்கின்றன. தேர்தல் தேதி நெருங்குவதால் தலைவர்களின் பரப்புரையும் தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றுடன் (ஏப்ரல் 6) நிறைவடைகிறது. இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு 3430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆண்கள் சார்பில் 2 ஆயிரத்து 731 மனுக்களும் பெண்கள் சார்பில் 698 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் தொகுதியில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடும் நிலையில், சுயேச்சைகள் அதிகமானோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில் 3 மனுக்கள் மட்டுமே இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி சாள் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *