
லால்குடியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின் தமிழ்நாட்டின் மிகப் பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார். இவர் பிரபல லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியாவார். லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக பெண் பிரிவு இணைச்செயலாளர் பதவி உடனடியாக வழங்கப்பட்டது. கட்சியில் சேர்ந்த 2 மாதங்களில் லால்குடி அதிமுக வேட்பாளராக லீமா ரோஸ் அறிவிக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சொத்து மதிப்பு ரூ.1,048 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இதுவரை பதிவான மிக உயர்ந்த சொத்து மதிப்பாகும். லீமா ரோஸின் சொத்து விவரங்களின்படி, தனது பெயரில்: சுமார் ரூ.1,048 கோடி (அசையும் சொத்துகள் உட்பட நகை, பணம் போன்றவை மற்றும் அசையா சொத்துகள் உட்பட நிலம், கட்டிடங்கள்). கணவர் மார்ட்டின் பெயரில்: சுமார் ரூ.4,159 கோடி மதிப்பிலான சொத்துகள் (அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட). மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில்: சுமார் ரூ.665 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.



