
காவல்துறை ஸ்டாலின் கையில் இல்லை, என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் இன்று(ஏப்ரல் 14) கூறுகையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வாரந்தோறும் பிரதமர் வருகை தருகிறார், பிரதமர் மோடி வந்ததிலிருந்து சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு மட்டும் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டுச் சென்றார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 11 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர் மலேசியா சென்றாலும், ஐநா சபைக்குச் சென்றாலும் தமிழைப் பற்றிப் பேசுகிறார். தமிழின் பெருமையை நிலைநாட்டுகிறார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதிக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை . அதனால் இன்று யாரைப் பற்றிப் பேசினால் எடுபடும் என்று நினைத்து பேசுகிறார்கள். ஆனால் அது மக்களிடம் எடுபடாது.
தமிழ்நாடு எப்போதும் வடக்கிற்கு ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ தான் என்று ஸ்டாலின் கூறுகிறார். உண்மையிலேயே ‘அவுட் ஆஃப் கண்ட்ரோலாக’ இருப்பது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குதான். பாலியல் வன்கொடுமைகள் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. காவல்துறை ஸ்டாலின் கையில் இல்லை, அவுட் ஆஃப் கண்ட்ரோலாகப் போய்விட்டது. இன்று தமிழ்நாடே திமுகவின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாகப் போய்விட்டது.” என்றார்..



