
சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் இன்று நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இன்று (ஏப்ரல் 15) வருகிறார்.
இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து இன்று இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, மாலை 4.10 மணிக்கு நாகர்கோவில் வருகிறார். மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் இருந்து வெப்பமூடு சந்திப்பிற்கு பிரதமர் மோடி காரில் வருவார் எனக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோ செல்கிறார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார். இதன் பின் மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து மாலை 6.20 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்படுவார் என்று கூறப்படுகிறது.



