
சாதாரண மற்றும் தக்கல் பாஸ்போர்ட் கட்டணத்தை மத்திய வெளியுறுவுத்துறை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தேவையான முக்கிய ஆவணங்களுக்குள் ஒன்றான பாஸ்போர்ட்டை பெறுவதற்கான கட்டண விதித்தில் மத்திய வெளியுறுவுத் துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. பாஸ்போர்ட் விதிமுறைகள் 1980-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாதாரண மற்றும் தக்கல் ஆகிய இரண்டு வகை பாஸ்போர்ட்களை பெற விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
அதன்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பாஸ்போர்ட்டை தக்கல் முறையில் பெற கட்டணம் 3,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 3,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே தக்கல் முறையில் பெற 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்கு பதில் புதிய 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க கட்டணம் 5,000 ரூபாயும், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் பெற 6,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் கட்டண விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய வெளியுறுத்துறை அறிவித்துள்ளது.



