
கொலை செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் ரஞ்சித் குமார்.
திருச்சி அருகே பேருராட்சி திமுக கவுன்சிலர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமார் (38) இவர் கூத்தைப்பார் பேரூராட்சியில் 11வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். அண்மையில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே அரசு மதுபானக்கடையில் ரஞ்சித் குமார் பார் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் வெட்டுக்காயங்களுடன் ரஞ்சித்குமார் இறந்து கிடந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த அவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த போலீஸார், விரைந்து சென்று கொலை செய்யப்பட்டுக் கிடந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்திற்கு திருச்சி எஸ்.பி.செல்வநாகரெத்தினம் நேரில் வந்து ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக பேருராட்சி கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



