
சட்டமன்ற தேர்தலில் விஜய் 200 இடங்களில் வெற்றி பெறுவார் என்று செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. மே 4 வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளன.
இந்த நிலையில், கோவை விமான நிலையில், தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (ஏப்ரல் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவரிடம் கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ” மக்கள் தீர்ப்பு வேறு, கருத்து கணிப்பு வேறு. மக்கள் மனநிலை புரியாமல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
கருத்துக் கணிப்பை பொறுத்தவரை, தலைவர், அம்மா காலத்தில் இருந்தே கருத்து கணிப்பிற்கும் வெற்றிக்கும் மாறுதலாக தான் இருந்திருக்கிறது. இதே நிலைதான் இப்போது நிலவப்போகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும். இலங்கை, நேபாளம், பங்களா தேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும் கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வதுதான்.
மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றில் இல்லாதபடி இருக்கும். பசுமை புரட்சி , வெண்மை புரட்சி, இன புரட்சி , சோசலிச புரட்சி வரிசையில் , அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது. விஜய் 200 இடங்களில் வெற்றி பெறுவார் அவர் தான் தமிழகத்தை ஆள்வார், இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று” என்றார்.



