
இந்த தேர்தலுக்குப் பிறகு பாஜக இருக்குமா, இருக்காதா என்பது தெரியும் என்று செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஒரு பக்கம் தியாகம், இன்னொரு பக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் ஆகும். மக்களோடு பணியாற்றக்கூடிய தலைவர் விஜய் தமிழ்நாட்டை நாளை ஆளப்போகிற தலைவர். பழைய சரித்திரம் சொல்லும். காரணம் 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும்.
பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைப்பதற்காக இரவு பகல் பாராமல் எத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீறு நடைபோடுகிறார். மே 4-ம் தேதி பதில் சொல்லும் சரித்திர தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும். நீங்கள் எங்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது 4-ம் தேதி பிரதிபலிக்கும்” என்றார்.
தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,” பாஜக இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பது தேர்தலுக்கு பின்பு தெரியும்” என்று பதிலளித்தார்.



