
நேபாளத்தில் திரிஷுலி ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து.
நேபாளத்தில் இன்று அதிகாலை திரிஷுலி ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து காத்மாண்டுவிற்கு இன்று (பிப்ரவரி 23) பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 44 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் அதிகாலை 1.30 மணியளவில் பைன்சிகௌடாவில் உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திரிஷுலி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இறந்த 17 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக ஆயுதப்படை (ஏபிஎஃப்) செய்தித் தொடர்பாளர் பிஷ்ணு பிரசாத் பட்டா தெரிவித்தார்.
மேலும், காயமடைந்த 24 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறிய அவர்,. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதேபோல், விபத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் மூன்று பாதுகாப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நடவடிக்கைக்காக, ஆதம்காட்டில் உள்ள ஏபிஎஃப் நேபாள பேரிடர் மேலாண்மை பிரிவைச் சேர்ந்த டைவர்ஸுடன் ஒரு குழுவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். குரிந்தரில் உள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த ஏபிஎஃப் டிஎஸ்பி சுனில் கிரி மீட்புப் பணிக்கு தலைமை வகித்தார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



