
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் விமானப்படை தளபதியின் இருப்பிடத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் தலைமை மதகுரு அலி கமேனி மற்றும் ஈரானின் ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்குப் பதிலடியாக ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஏவுகணைகளை ஏவியதாகக் கூறுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் இருப்பிடத்தை குறிவைத்து கைபர் ஷெக்கான் வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள டெலிகிராம் அறிக்கையில், “10வது அலை தாக்குதலின் போது, குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் விமானப்படை தளபதியின் இருப்பிடமும் கெய்பர் ஷெகன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இலக்கு வைக்கப்பட்டு திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன ” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த 10-வது அலை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவிக்கிறது. இந்த ஏவுகணை தாக்குதல் நடந்த போது நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா என்பது குறித்தோ, அவரது தற்போதைய நிலை குறித்தோ அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நெதன்யாகு நிலை தெளிவற்றதாக இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் அரசு அல்லது ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த தகவல்களையும் உறுதிப்படுத்தவில்லை.



