
திருச்சி பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைந்து முழு சங்கியாகவே மாறியிருக்கிறார்என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரையை நேற்று (மார்ச் 31) தொடங்கினார். இந்த நிலையில், திருச்சியில் அவர் இன்று (ஏப்ரல் 1) திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

திருச்சியில் வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி உழவர் சந்தை பகுதியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது மாதிரி, திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைத் தந்தீர்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு இரண்டு சிறப்பான அமைச்சர்களை நீங்கள் தந்திருக்கிறீர்கள். இந்த முறையும் திருச்சியில் 100 சதவீத வெற்றியைத் தருவீர்களா?”
அதிமுக, பாஜக கூட்டணிக்கு இந்த தேர்தலிலும் படுதோல்வி தான். சம்பந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்தியவர் இபிஎஸ்.
அதிமுகவை அடிமை கூட்டமாக மாற்றியது இபிஎஸ் தான். * திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என சிரித்துக்கொண்டே கூறியவர் இபிஎஸ்.
அவர் தனது பதவியை காப்பாற்றி கொள்ள பாதம் பாதம் தாங்கியாக இருக்கிறார். சிஏஏ சட்டத்தால் எந்த இஸ்லாமியர் பாதிக்கப்பட்டனரா என கேட்டவர் இபிஎஸ். சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்டபோது 70 பேர் உயிரிழந்தனர். சிஏஏ சட்டம் நிறைவேற காரணமாக இருந்து துரோகம் செய்தது அதிமுக மற்றும் பாமக தான்.
பாஜகவுடன் இணைந்து முழு சங்கியாகவே மாறி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கூட்டணியில் பிரச்சனை இல்லை எனில் அத்தனை முறை ஏன் அவர் டெல்லி செல்ல வேண்டும்? தேர்தல் வாக்குறுதியாக நான் அறிவித்துள்ள ரூ.8000 கூப்பன் திட்டம் பற்றியே பேச்சாக உள்ளது. தமிழ்நாட்டில் அமைதியான சூழலும் மனித வளமும் இருப்பதால்தான் எண்ணற்ற முதலீடுகள் வந்துள்ளன” என்று கூறினார்.



