
கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி ஒருமையில் மிக மோசமாக பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை, தவெக நிர்வாகியான செங்கோட்டையன் விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஒருமையில் மிகக் கடுமையான முறையில் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அவர் பேசுகையில்,” செங்கோட்டையனைப் பற்றி பேசியே ஆகணும். இதுவரைக்கும் பேசாமல் இருந்தேன். அவர் தானாக எம்எல்ஏவாகலை.. இங்க இருக்கும் அதிமுக நிர்வாகிகள் இரவென்றும் பகலென்றும் பாராமல் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உங்கள் உழைப்பால் அவர் எம்எல்ஏ ஆனார்.
செங்கோட்டையன் ஒரு மோசமான குணம் படைத்தவர். ஒரு நல்ல சட்டை போட்டுட்டு போனால் கூட பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கின்ற வரை யாராவது நிம்மதியா வாழ முடிஞ்சதா? இந்த பகுதியில் உள்ள சிந்து ரவிச்சந்திரனை பொட்டி கட்டி அனுப்பிச்சிட்டார். அப்புறம் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் கந்தசாமி கட்சியை விட்டுப் போறாங்கன்னா என்றால், இவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? அவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடிய மனிதர் இந்த செங்கோட்டையன். இனிமேல் மரியாதை கொடுத்தெல்லாம் பிரயோஜனம் இல்லை,
செங்கோட்டையன் அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தபோது செங்கோட்டையனுடைய மனைவி, மகன் தலைமைச் செயலகம், வந்து ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தாங்க. அது கேவலமான புகார். நான் வந்து இந்த பதவியில இருக்கிறதுனால அதைச் சொல்லலை. செங்கோட்டையன் மனைவியும் மகனும் ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு படிக்கட்டுல இருந்து கீழே இறங்குறதுக்குள்ள பதவி போயிடுச்சு. ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தால் பதவியில் இருந்து எடுப்பாங்களா? அப்படி இண்டு பேரும் இவர் மேல புகார் கொடுத்து, அது என்ன புகார்னு நீங்களே தெரிஞ்சுக்கலாம். இவர் எப்பேர் பட்ட ஆளுன்னு உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லக்கூடாது.
ஒரு அமைச்சராக இருக்கிறவரு, பல முறை எம்எல்ஏவாக இருந்தவரு, அவர் மீது அவருடைய மனைவியும் மகனும் வந்து புகார் கொடுக்கிறாங்கன்னா, இவரெல்லாம் எப்பேர்ப்பட்ட மோசமான மனிதர்னு ஜெயலலிதா சொன்னாங்க. அப்படிப்பட்ட ஆளை, நான் முதலமைச்சராகி என்னுடைய அமைச்சரவையில் சேர்த்ததுதான் நான் செஞ்ச தப்பு. என்னுடைய அமைச்சரவையில, கெஞ்சி கண்ணீர் விட்டார் மனுஷன். இப்பெல்லாம் வாய் கொழுப்புல பேசிக்கிட்டு இருக்கார். ஒரு காலத்துல நல்ல நண்பராகத்தான் செங்கோட்டையன் இருந்தார், அந்த நட்பு அடிப்படையில அமைச்சர் பதவி கொடுத்தேன். அந்த மரியாதை உனக்கு இருக்குதா? ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ன்னு 2,000 வருஷத்துக்கு முன்னாடியே ஐயன் திருவள்ளுவர் சொல்லிட்டுப் போனாரு. இது மாதிரி மனிதர்களையெல்லாம் மன்னிக்க முடியுமா?இப்படிப்பட்ட ஆள் மன்னிக்க முடியாத ஆள். இப்ப எங்க போயிட்டார்?
சேர வேண்டிய இடத்துலதான் சேர்ந்திருக்கார். ஆக, நீ வந்து என்னை பத்தி கேவலமா பேசுற? செங்கோட்டையன் அவர்களே, நீ 100 நாள் ஜெயில் இருந்துட்டு வந்திருக்கே. நீ யோக்கியமான ஆளா? நாக்கு இருக்குது, வாக்கு இருக்குதுன்னு பேசுனியே, அசிங்கமா போய் ரோட்ல நடக்க முடியாது, அத்தனை ஆதாரத்தை வைத்திருக்கிறேன். நான் முதலமைச்சராக இருந்தபோது நீ போட்ட ஆட்டமெல்லாம் எங்களுக்குத் தெரியும். அதனால் ஜாக்கிரதையாக நீ பேசணும். ஆட்சி மாறும், காட்சி மாறும். ஆட்சி மாறுகின்ற போது, நீ வந்து தாக்குபிடிக்க முடியாது” என்று பேசினார்.



