
தமிழ் மக்கள் யார் என்று பாஜகவிற்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் தெரியவில்லை என்னு ராகுல் காந்தி கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 28) பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி வந்தார்.
அங்கு அமைக்கப்பட்ட மேடையில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், : நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், எனது குடும்பம் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் உணர்வு தமிழ் மண்ணுடன் ஒன்றியுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக எப்போதெல்லாம், தமிழ்நாட்டை தமிழ் மக்களை தமிழ் மொழியை தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழனாகவே உணர்ந்திருக்கிறேன்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பலத்தை நாடாளுமன்றத்தில் குறைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அந்த மசோதாவை நேற்று தோற்கடித்து முறியடித்தோம். பண்டைய காலங்களில் ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்படும். பாஜகவும் அதை தான் செய்கிறது, ஆனால் அவர்கள் ராணுவம் இல்லாமல் அதை செய்கின்றனர். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று கூறி அரசியல் சாசனத்தின் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்துகிறார்.
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளுவதற்கு அவர்களுக்கு ஒரு பொம்மை முதல்வர் தேவைப்படுகிறார். எப்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சமரசம் செய்யப்பட்ட பிரதமர் இந்தியாவில் அவருக்கு தேவையோ அதுப்போன்று தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளுவதற்கு ஒரு பொம்மை முதலமைச்சர் தேவைப்படுகின்றனர். தமிழ் மக்கள் யார் என்று பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் தெரியவில்லை. பாஜக தனது வாழ்நாளில் தமிழையும் தமிழ்மக்களையும் ஒரு நாளும் தொட முடியாது” என்றார்.



