
பெண் தாசில்தாரை காதலித்து திருமணம் செய்த துணி வியாபாரி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவர் போலிபள்ளி சூரியபிரகாஷ் (வயது 41). இவர் உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் மேடபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா என்பவரை காதலித்து வந்தார். சந்திரா ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்த காலத்தில் இருந்து பழகி வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
காதலுக்கு எதிர்ப்பு
இவர்களின் காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இவரும் வீட்டை விட்டு வெளியேறி அன்னாவரம் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர். திருமணம் முடிந்த போலிபள்ளி சூர்யபிரகாஷ் தன் காதல் மனைவியுடன் தனது சொந்த கிராமமான கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டபேட்டா மண்டலத்திற்கு உட்பட்ட வேமுலபள்ளிக்குச் சென்றுள்ளார். இதையறிந்த சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால், கிரிபாபு ஆகியோர் போலிபள்ளி சூரியபிரகாஷ் வீட்டிற்கு நள்ளிரவு சென்று தாக்கியுள்ளனர்.
ஆணவக் கொலை
அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி போலிபள்ளி சூரியபிரகாஷின் தலை மீது போட்டனர். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே போலிபள்ளி சூரியபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட சந்தியா அலறித் துடித்தார். இதையறிந்த போலிபள்ளி சூரியபிரகாஷ் உறவினர்கள் சந்தியாவின் சகோதரர்களைச் சுற்றி வளைத்து தாக்கினர். தகவல் அறிந்த மண்டபேட்டா கிராமப்புற எஸ்ஐ வி கிஷோர், சிஐபி டோரா ராஜு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலிபள்ளி சூரியபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது
இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்ததுடன் சந்திரபால், கிரிபாபு மற்றும் இவர்களுக்கு உதவிய மற்றொரு நபர் என மூன்று பேரை கைது செய்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கிழக்கு மண்டல டிஎஸ்பி வித்யாவும் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். காதல் திருமணம் செய்த துணி வியாபாரி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



