
டெல்லியில் பாலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியின் பாலம் பகுதியில் இன்று (மார்ச் 18) அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், 30 தீயணைப்பு வாகனங்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மீட்பு நடவடிக்கையில் அவசர கால மீட்புப் பணியாளர்கள், போலீஸார் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஈடுபட்டன. தீ மிக வேகமாக பரவியதால் கட்டிடத்திற்குள் சிலர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தீயணைப்புத்துறையினரால் தீயிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவக்ள் உயிரிழநத்னர். முன்னதாக தீயிலிருந்து தப்பிப்பதற்காக கட்டிடத்தில் இருந்து கீழே குதித்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய விபத்து மற்றும் அதிர்ச்சி சிகிச்சை சேவைகள் அமைப்பைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
மேலே நான்கு தளங்களையும், தரைத்தளத்தில் ஒரு தளத்தையும் கொண்ட கட்டிடம் என்பதால் அதற்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் குறித்து டெல்லி தீயணைப்புச் சேவைத் துறை (டிஎஃப்எஸ்) அதிகாரிகள் தெரிவித்தனர்.



