
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளும், தமிழ்நாட்டில் 243 தொகுதிகளும், கேரளாவில் 140 தொகுதிகளும், அசாமில் 126 தொகுதிகளும், புதுச்சேரியில் 30 தொகுதிகளும் உள்ளன. அசாம், கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வங்காளத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வங்காளத்தின் 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், வெற்றியை உறுதி செய்வதற்கு 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மைக்கான வரம்பு தமிழ்நாட்டில் 118, கேரளாவில் 71, அசாமில் 64 மற்றும் புதுச்சேரியில் 16 ஆகும்.
இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது; அசாமில் என்டிஏகூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது; கேரளாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது; இங்கு நடிகர் விஜய்யின் தவெக வலுவான முத்திரையைப் பதித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு தவெக பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை தவெக 111 தொகுதிகளிலும், திமுக 65 தொகுதிகளிலும், அதிமுக 58 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்: கேரளா, புதுச்சேரி, தமிழகம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில தொகுதிகளுக்கான வெற்றியாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கு வங்காளத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின்படி அங்கு பாஜக 200 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை நெருங்கி வருகிறது; அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில், திரிணாமுல் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முக்கிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் போக்குகள் மாறுவதைக் காண, சூரியன் மறையும் நேரம் வரை காத்திருக்குமாறு அவர் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். தனது கட்சி 100 தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததாகவும், ஆனால் அந்தத் தரவுகளை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே வெளியிடாமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்காளத்தின் ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும். எனவே, இன்றைய தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் இத்தொகுதியின் முடிவுகள் இடம்பெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



