
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
பாஜக தலைமையிலான என்டிஏ அரசு, தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026-ஐ கொண்டு வர உள்ளது. இதற்காக ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமர்வில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மக்களவையின் பலம் 543 என்ற எண்ணிக்கையில் இருந்து 850 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அவரது எக்ஸ் தளத்தில் இன்று (ஏப்ரல் 15) பதிவிட்டுள்ளார். அதில், “அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்
அதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும். மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3 சதவீதம்.. இது குறைந்து 20.7 சதவீதமாகும் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும். அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



