
3 ஆண்டுகள் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி, அவரது காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டம், ராவ் காவல் நிலையப்பகுதிக்குட்பட்ட ஏப்ரல் 12 இரவு கேட் சாலையில் உள்ள நக்ராலி தானிக்கு முன்பு ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது அந்த நபர் இறந்து கிடந்தார். அவரது அருகில் காலித் தோட்டக்கள் கிடந்தன. இதனால் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர். அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
விசாரணையில், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டவர், ராவ் பகுதியைச் சேர்ந்த நவீன் பதிதார் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நவீன் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த காலித் தோட்டாக்களையும், அப்பகுதியைச் சுற்றியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது தெரிய வந்தது. அதன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வண்டி கிளாமர்ஹில்ஸ் காலனியில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை அந்த பகுதியைச் சுற்றி வளைத்தது. அந்த மோட்டார் சைக்கிளுடன் இருந்த உஜ்ஜைனியைச் சேர்ந்த முகேஷ் குமாவத், தேவாஸ் மாவட்டத்தைச சேர்ந்த தோல்பூரியா, ஸ்ரீராம் பாலாய் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்திய போது நவீன் பதிதாரை கொலை செய்த கும்பல் அவர்கள் தான் என்பது தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது போலீஸாருக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட நவீனின் மனைவி பார்திக்கும், முகேஷ் குமாவத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த பார்தியின் கணவர் நவீன் பதிதார் கண்டித்துள்ளார். இதனால் தனது கணவரை கொலை செய்ய தனது காதலுடன் மூன்று ஆண்டுகள் பார்தி திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அவரையும் கைது செய்த போலீஸார் ஒரு மோட்டார் சைக்கிள், நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய உஜ்ஜைனியைச் சேர்ந்த ராகுல் உய்கே என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். முகேஷ் குமாவத் மீது கொலை, கொலை முயற்சி, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் மகைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளும் குற்றப்பின்னணி உடையவர்கள் என்பதால் அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை மூன்று ஆண்டுகள் திட்டமிட்டு மனைவி கொலை செய்த சம்பவம் இந்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



